புதிய வரவுகள் »

சனி, 11 ஜனவரி, 2014

டெசோ! (வ.வா.ச) 1

டெசோ!
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)


முக்கியம் எதுவோ அஃதை
மூடியே மறைத்து விட்டு
மக்கிய பிறகெ டுத்து
மணிக்கணக் காகப் பேசிச்
சிக்கலைத் தீர்ப்ப தாகச்
செப்பிடும் கலையால் இன்றும்
மக்களை திசைதி ருப்ப
வந்துளேன் ஆத ரிப்பீர்!

பலமுறை நாட்டை ஆண்டு
      பகற்கொள்ளை அடித்த போதும்
தலைமுறை ஆளும் ஆசைத்
      தவிப்பினால் தக்க வற்றை
இலைமறை காய்ம றையாய்
      இயற்றியே நல்லோன் போல
நலமுற வாழ்வோன் உம்மை
      நாடினேன் என்சொல் ஏற்பீர்!

செந்தமிழ் நாட்டை ஆளத்
      தேவையோர் மொழிப்போர் என்று
சிந்தையைப் பிழிந்து கண்டு
      செயலிலும் இறங்கி வென்றே
இந்தியிற் கிறங்கல் பாடி
      இந்நாட்டில் இங்கி லீசாம்
மந்தியிற் கிடங்கொ டுத்து
      மகிழ்ந்தவன் என்பின் வாரீர்!

மயிரினும் கீழாய் உம்மை
      மனத்தினில் எண்ணும் போதும்
‘உயிரினும் மேலாம் என்றன்
      உடன்பிறப் புகளே!’ என்று
மயக்கத்தை ஏற்ப டுத்தும்
      மணிமொழி பேசி உம்மை
இயக்கத்திற் கிழுந்து வந்த
      இளவலென் இன்சொல் கேட்பீர்!

தடியெடுத் தானே தாடிக்
      கிழவனும் மூக்கில் போடப்
பொடியெடுத் தானே காஞ்சிப்
      புதல்வனும் ஈழம் காக்க
முடிவெடுத் தான பின்னே
      முறையிட்டார் கனவில்; நானும்
அடியெடுத் தேகு கின்றேன்
      அவ்வழி, அணிவ குப்பீர்!

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக