புதிய வரவுகள் »

செவ்வாய், 21 ஜனவரி, 2014

டெசோ! (வ.வா.ச) 3



டெசோ!
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)



தாய்த்தமிழ் நாட்டை ஆண்ட
      தலைவனென் உதவி கேட்டுச்
சேய்த்தமிழ் ஈழம் கண்ட
      செம்மலேன் அணுக வில்லை?
போய்த்திமிர் போரில் காட்டிப்
      பொன்றிடத் துணிந்தா ரன்றி
வாய்த்திமிர் காட்டும் என்போல்
      வலம்வர அறிந்தா ரில்லை!

பதறிடாச் செயலென் றைக்கும்
      பக்குவம் அடையு மன்றிச்
சிதறிடா தென்று கண்டு
      தெளிந்தத னாலே அன்று
கதறிய ஈழத் தைநான்
      காத்திடத் துடித்தெ ழுந்தே
உதறிட வில்லை என்றன்
      ஊராளும் விரும்பத் தைநான்!

நாற்காலி சிங்க ளர்கள்;
நானிங்கே அமர்ந்த தூவும்
நாற்காலி ஆன தாலே
நானதை விட்ட கன்றால்
நாற்காலி இரண்டும் செர்ந்தே
எண்காலில் ஆடும் என்றே
போர்காலப் பொழுதிற் கூட
      பொறுமையாய் இருந்து விட்டேன்

பெரும்புயல் என்பேச் சென்று
      பேசினீர்; ஆட்சி போனால்
வெறும்பயல் பேச்சென் றன்றோ
      விளம்புவீர்; அதனா லும்தான்
இரும்பென நெஞ்சை ஆக்கி
      இரண்டகம் அதிலே தேக்கித்
துரும்பையும் நகர்த்த வில்லை
      துடித்திடும் ஈழத் துக்காய்!

ஆட்சியை விரும்பு வேனா?
அழிவுறும் ஈழ நாட்டின்
மீட்சியை விரும்பு வேனா?
      விரைந்துசெங் கோலைக் காக்கும்
சூட்சுமம் தெரிந்த தாலே
      துணைபோனே னன்றி ஆங்கே
சாட்சியம் இல்லாப் போர்க்குச்
      சம்மதம் சொல்ல வில்லை!

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக