புதிய வரவுகள் »

வெள்ளி, 31 ஜனவரி, 2014

டெசோ! (வ.வா.ச) 5



டெசோ!
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)



வில்லடி யாலே அன்று
      வென்றவன் ராமன்; பக்தன்
கல்லடி தந்த தாலே
      கனிந்தவன் ஈசன்; இன்றோ
செல்லடி யாலே நம்மைச்
      சிங்களர் கொன்றார்; நானோ
சொல்லடி யாலே அந்தத்
      துடுக்கரைக் வெல்வேன்; ஆணை!

பேசியே நாட்டை ஏய்த்த
      பெருமையிற் குரியோன் என்னை
ஏசியே பெருமை கொள்ளும்
      ஏந்திழை கண்டு நாணிக்
கூசியே சாகும் வண்ணம்
      குவலயத் தீழம் என்றன்
ஆசியால் விடுத லைபெற்(று)
      ஆங்குறும்; தமிழ்மேல் ஆணை!

அறிக்கைகள் விட்டு விட்டே
      அலரிடச் செய்வேன்; ஆளும்
வெறித்தன சிங்க ளர்க்கு
      வெறுப்பினை ஏற்ப டுத்தும்
குறிப்பினை எடுத்துக் கூறிக்
      குடைசலைத் தருவேன்; என்றன்
நரித்தன தின்முன் அந்த
      நாய்களா நிற்கக் கூடும்?

ஆருக்கும் அடங்கி டாமல்
      ஆடிடும் இராஐ பக்சே
நேருக்கு நேர்நின் றேநான்
      நிகழ்த்துவேன் சோற்போர்; அந்தப்
போருக்கு நடுவர் என்தாய்
      சோனியா; படம்பி டித்துப்
பாருக்குக் காட்ட வன்றோ
      பண்ணினோம் கலைஞர் டி.வி.

சிலம்பிலே ஈழம் ஆண்ட
      செந்தமிழ் மன்னன் பற்றி
நலம்படக் கூறி யுள்ளார்
      நற்றமிழ் இளங்கோ; ஆக
வளம்பல கொண்ட நாட்டை
      வந்துபின் நாளில் பற்றித்
தளமென ஆக்கிக் கொண்டார்
      தடியராம் காடை யர்கள்!

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக